sai yoga centre

Friday, February 17, 2012

மகா சிவராத்திரி விரதங்கள்

சிவம் எ‌ன்ற சொல்லுக்கு சுகம் எ‌ன்று பொருள் உள்ளது. உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை உருவாக்க பார்வதிதேவி சிவனை வழிபட்டு இரவு முழுவதும் இருந்த விரதமே "சிவராத்திரி விரதம்' எனப்படுகிறது. இந்த விரதத்தை முறைப்படி கடைபிடிக்க வேண்டும். சிவராத்திரி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் நன்மை பெருகும்.

நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து சிவராத்திரிகள் உள்ளன.

நித்ய சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும். நித்திய சிவராத்திரி விரதம் இருக்க விரும்புபவர்கள் தொடர்ந்து 24 முறை இருக்க வேண்டும். பெண்கள் 24 முறை விரதம் இருக்கலாம்.

பட்ச சிவராத்திரி

தை மாதம் தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு 14ம் நாளான சதுர்த்தசி அன்று முழுமையாக சாப்பிடாமல் இருந்து அன்று மாலை சிவன் கோயிலுக்கு சென்று வில்வமாலை அணிவித்து சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

மாத சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும்.

யோக சிவராத்திரி

ஏதாவது ஒரு திங்கட்கிழமையில் பகலிலும் இரவிலும் முழுமையாக அமாவாசை திதி இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும். இந்த யோகா சிவராத்திரி ‌மிகவு‌ம் அரிதாக வரும்.

மகா சிவராத்திரி

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.
சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

சிவராத்திரி வழிபாடு

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் அதிக பலன் கிடைக்கும்.

விரத முறை

சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பவர்கள் அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. உலகத்தின் அமைதிக்காகவும் நன்மைக்காகவும் சிவாலயங்களில் ஹோமத்திற்கு எற்பாடு செய்வார்கள். "ஓம் நவசிவாய" என்ற மந்திர உச்சரிக்கவேண்டும். மகா சிவராத்திரி இரவு கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம" என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். 
பூஜை வழிபாட்டு முறைகள்

இரவின் நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பக்தியுடன் அவரை வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் அரிசி, இரண்டாம், மூன்றாம் ஜாமங்களில் கோதுமை, நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, பயிறு, தினை ஆகியவற்றை அட்சதையாக சிவலிங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். முதல் ஜாமத்தில் தாமரை பூக்களாலும், இரண்டாம் ஜாமத்தில் தாமரை மற்றும் வில்வத் தாலும், மூன்றாம் ஜாமத்தில் அருகம் புல்லாலும், நான்காம் ஜாமத்தில் தாழம்பூ, செண்பகம் நீங்கலான மற்ற மணம் கமழும் மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.