sai yoga centre

Showing posts with label ஆடிக் கிருத்திகையை பாடிக் கொண்டாடுவோம்.. Show all posts
Showing posts with label ஆடிக் கிருத்திகையை பாடிக் கொண்டாடுவோம்.. Show all posts

Friday, November 11, 2011

ஆடிக் கிருத்திகையை பாடிக் கொண்டாடுவோம்..!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..!


 அப்பன் முருகன் வீற்றிருக்கும் அத்தனை திருத்தலங்களும் ஆடிக்கிருத்தியை முன்னிட்டு கோலாகலமாக இருக்கின்றன. பக்தர்கள் தங்களது பெருமானை பார்க்க படியேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.  
தமிழகத்து மக்களால் பெரிதும் விரும்பி வணங்கிப் போற்றப்படும் தெய்வமான முருகன், கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என விளங்கி அடியார்களுக்கெல்லாம் முருகன் அருள் செய்தி வருகின்றான்.

முருகன் என்றதுமே தமிழ் மக்களின் உள்ளமெல்லாம் உருகும். முருகன்பால் தமிழ் மக்களுக்கு எல்லையில்லாத பக்தியுண்டு.

தமிழ்நாட்டில் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் முருகனுக்கு கோவில்கள் அமைந்திருக்கின்றன. முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி முதலிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டு மகிழ்கிறார்கள். முருகன் கோவில்கள் எல்லாம் சிறந்த பிரார்த்தனை தலங்களாக விளங்குகின்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் முருகன் கோவில்களில் பெருந்திரளாகக் கூடி வணங்கி மகிழ்கிறார்கள்.

தொல்காப்பியம் என்னும் பண்டைப் பெருந்தமிழ் நூலிலும் முருகன் வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. மேலும் சங்க காலப் புலவர் பெருமான் முருகனைப் பற்றி திருமுருகாற்றுப்படை என்னும் துதி நூலை பாடியிருக்கின்றார். அதன் மூலம் ஆறு திருத்தலங்கள், முருகனின் அறுபடை வீடுகள் என்ற சிறப்பை பெற்றுள்ளன.

திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரனின் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.

திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.

பழனி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டி போட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.

சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தலமிது.

திருத்தணி - சூரனை வதம் செய்த பின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.

பழமுதிர்ச்சோலை - அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி, தெய்வானையோடு காட்சித் தரும் திருத்தலமிது.

முருகன் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலவன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன. புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர் இந்த ஆறு குழந்தைகளையும் வளர்த்தனர்.

பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறுமுகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகம் என்று அழைக்கப்படுகிறார். கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தந்தைக்கு ஓம் என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறும் உண்டு. ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையில் உண்டானது. அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

அ, உ, ம என்னும் இந்த மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது. முருகு என்ற மூன்றெழுத்துக்களிலும் அ, உ, ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன்.

முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்த வரலாறும் உண்டு.

தெய்வானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும், மயில் ஆணவம் என்றும், சேவல் சிவஞானம் என்கிறார்கள் புலவர்கள்.

தன்னை வணங்கும் பக்தர்களுக்கு எப்போதும் அருள் பாலித்து வரும் எம்பெருமான் அப்பன் முருகனை இன்றைய கிருத்திகை நாளில் நானும் வணங்குகிறேன்.

நாளென் செயும் வினை தானென் செயுமெனை நாடி வந்த
கோளென் செயுங் கொடுங் கூற்றென் செயுங்கும் ரேசரிரு
நாளுஞ் சிலம்பஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகத்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடனே..!

முருகா சரணம்..!
கந்தா சரணம்..!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
கந்தவேல் முருகனுக்கு அரோகரா..