sai yoga centre

Showing posts with label அக்னி நட்சத்திரம். Show all posts
Showing posts with label அக்னி நட்சத்திரம். Show all posts

Monday, April 30, 2012

அக்னி நட்சத்திரம்


அக்னி நட்சத்திரம் எப்படி பிறந்துச்சு:முன்னொரு காலத்தில் சுவேதகி யாகத்தில் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய் ஊற்றி யாகம் செய்தனர். தொடர்ந்து அக்னி தேவன் அந்த யாக நெய்யை உண்டதால் உடலில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருந்து காண்டவ காட்டை அழித்து உண்பதுதான் என்று ஆலோசனை கூறப்பட, காண்டவ வனத்தை நோக்கிச் சென்றான் அக்னிதேவன். அதனை அறிந்து அக்காட்டில் வசித்த உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் வருணனிடம் உதவி வேண்டின. எனவே வருணன் இடைவிடாது மழை பெய்தான். அதனால் அக்னியால் காட்டை அழிக்க முடியவில்லை. எனவே அக்னி தேவன் திருமாலிடம் உதவி வேண்டினான். திருமால், அர்ச்சுனனிடம் அக்னிக்கு உதவச் சொன்னார். அர்ச்சுனன் தன் கணைகளால் அந்தக் காட்டை மறைத்து சரக்கூடுகட்டி தீ அணையாது எரிய உதவினான். அப்போது திருமால் அக்னிக்கு ஒரு நிபந்தனை விதித்தார். உனக்கு இருபத்தோரு நாட்கள் அவகாசம் தருகிறேன். அதன்பின் நீ காட்டை அழிக்கக் கூடாது என்றார். எனவே அக்னி 7 நாட்கள் மெதுவாக எரிந்து பின் 7 நாட்கள் வேகமாக எரிந்து கடைசி 7 நாட்கள் வேகம் குறைந்து உண்டபின் திரும்பினான். அதுவே அக்னி நட்சத்திர காலம் என புராணக்கதை கூறுகிறது.

அக்னி நட்சத்திரம் அசத்தி எடுத்துடும்: அக்னி நட்சத்திரம். ஒவ்வொரு வருடமும் உஸ் என்று வியர்த்து வழிவதில் ஆரம்பித்து அப்பாடா என்று களைத்து அமர்வதில் இது முடியும். இப்படி அசத்தி எடுக்கும் அக்னி நட்சத்திர நாட்களுக்கும், புராணத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ? அக்னி நட்சத்திர நாளில் சந்திரனும் பூமியும் சூரியனுக்கு சற்று அருகே இருப்பதால்தான் இந்த நிலை என்கிறது விஞ்ஞானம். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி தேவன். இது நெருப்பைக் கக்கும் நட்சத்திரம் எனவே இதை அக்னி நட்சத்திரம் என்பர்.

ஆறுதல் பெற ஆண்டவனை கும்பிடுங்க: அக்னி நட்சத்திர காலத்தில் அதிகாலை துயிலெழுந்து நீராடியபின் சூரிய பூஜையும், சூரிய நமஸ்காரமும் செய்வது சிறந்தது. முருகனையும், மீனாட்சியையும் வழிபடுவதுடன், பரணிக்குரிய துர்க்கையையும், ரேவதிக்கு உரிய பிரம்மனையும், கிருத்திகைக்கு உரிய அக்னியையும் வழிபாடு செய்வதும் நல்லது.

தாகம் தீர்க்க தானம் பண்ணுங்க: குடை, விசிறி, காலணிகள் தானம் செய்யலாம். அத்துடன் அன்னதானமும் ஆடைதானமும் செய்வது நல்லது. தண்ணீர்ப் பந்தல் அமைத்து தண்ணீர், நீர்மோர் போன்றவத்தைத் தருவது நற்பலன் தரும். அக்னி நட்சத்திர நாட்களில் நோய்கள் பல பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. அக்னிக் காற்று நோய் பரப்பும் தன்மை கொண்டது. அதனால் தினமும் குடத்தில் நீர் நிரப்பி மஞ்சள் கரைத்த அதனை வேப்பிலைக் கொத்துகளால் நனைத்து வீடு முழுதும் தெளிக்கலாம். நரசிம்மரை வழிபட்டு தயிர்சாதம், நீர்மோர், பானகம் படைத்து தானம் செய்யலாம். விஷ்ணு நாமத்தை 108 முறை ஜபிக்கலாம். சீதளா தேவி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதும் நல்லது.

கருணை மழையில் நனையுங்க: எளிய எல்லோராலும் இயன்ற வழி, இக்காலத்தில் அகமும் புறமும் தூய்மையுடன் இருப்பதும், பிறர் மனம் குளிரும் வண்ணம் நடப்பதும், இயன்ற அளவில் தருமம் செய்வதும், மனம் உருகி இறைவனை வழிபடுவதும், கடவுள் அருள் மழையில் நம்மை நனைக்கும் என்பது நிச்சயம். இறைவன் கருணை மழையில் நனைந்து விட்டால் கத்திரி வெயிலும் நம்மை வாட்டாது குளிரும் வாழ்வும் மலரும்.