sai yoga centre

Tuesday, November 15, 2011

ஹோமம் நடத்துவதன் பலன் என்ன?

ஹோமங்களில் பல வகை உண்டு. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு பலன் இருக்கிறது. பொதுவாக ஹோமங்களை விளை நிலங்களில்தான் நடத்த வேண்டும். அப்படித்தான் பழங்காலத்தில் நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக செங்கரும்பு, செவ்வாழை விளைந்த நிலத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, பசுவைக் கொண்டு சுத்தப்படுத்தி (அதாவது பசுவை வலம் வரச் செய்தல்), அதன் பின்னர் யாக குண்டம் அமைத்து ஹோமம் செய்வதுதான் முறையானது.

தற்போது சிமெண்ட் அல்லது டைல்ஸ் தரையின் மீது வீடு கட்டுவதற்கு பயன்படுத்தும் மணலைப் பரப்பில், செங்கற்களை அடுக்கி பெயருக்கு ஹோமம் செய்கின்றனர். இதனால் நிச்சயம் முழுப்பலன் கிடைக்காது.

மேலும், இன்றைய சூழலில் ஹோமம் நடத்துவதற்கு வரும் குருமார்கள், கையில் செல்போன் சகிதம் வருகின்றனர். அதில் அழைப்பு வந்தால் பேசிக் கொண்டே மந்திரங்களை ஜெபிக்கின்றனர். இதுவும் சரியான முறை அல்ல. கண்டிக்கத்தக்கது.

ஹோமம் செய்யும் போது குறிப்பிட்ட ஆவர்த்திகளை உச்சரிக்கும் சமயத்தில் 100% கவனம் தேவை. முறையான சமித்துகள் கொண்டு யாகம் செய்யும் போதுதான் முழுமையான பலன் கிடைக்கும்.

இன்றைய தேதியில் முறையாக ஹோமம் செய்யும் குருமார்களை விரல் விட்டு எண்ணி விடலாம். திருவையாறு போன்ற பகுதிகளில் சில வைதீக, ஐதீகக் குடும்பங்கள் இன்றளவும் வசிக்கின்றனர்.

அவர்கள் முறையான உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுடன், வேதங்களையும் தெளிவாகக் கற்றறிந்துள்ளனர். மழை பொழிந்தாலும், வெயில் அடித்தாலும் எதையும் ஆகம விதிப்படியே செய்யும் பழக்கம் உடையவர்கள். அவர்கள் மூலமாக ஹோமம் செய்யும் போது அதற்கான பலன்கள் மேம்பட்டவையாக இருக்கும்.

பல்வேறு வகையான ஹோமம், யாகங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட தியாகமே சிறந்த பலனை அளிக்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, யாகத்தை விட தியாகம் தான் வெற்றியைக் கொடுக்கும். 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.